Revelation - Chapter 7
Holy Bible

1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து,
3 எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறினார்.
4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
5 யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
6 ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
7 சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.
9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்: அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்: வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்
10 அவர்கள், அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது என்று உரத்த குரலில் பாடினார்கள்.
11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்: பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.
12 ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன: ஆமென் என்று பாடினார்கள்.
13 மூப்பர்களுள் ஒருவர், வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா? என்று என்னை வினவினார்.
14 நான் அவரிடம், என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும் என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்: தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்: அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா: கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.
17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்: வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

Holydivine